கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடைபயணம் இன்று மதவாச்சியை சென்றடைந்தது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளை அடுத்து, இன்றைய நடைபயணம் ஆரம்பமானது.
இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மஹேல ஜயவர்தன உள்ளிட்ட பலர் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நடைபயணத்திற்கு வவுனியா நகர எல்லையில், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் இணைந்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
வடக்கின் பருத்தித்துறையில் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபயணம், எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி தெய்வேந்திரமுனையில் நிறைவடையவுள்ளது.


